Skip to main content

நீங்கள் தேசியவாதியா, தேசப்பற்றாளரா?

Submitted by admin on Sun, 08/14/2016 - 08:12

இன்று இந்தியா சுதந்திரம் பெற்ற தினம். இந்த நாளில் இந்தியன் என்று பெருமை கொள்வதன் அர்த்தத்தை ஆழமாக அலசிப் பார்ப்பது அவசியமாகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் தேசியவாதத்தின் எழுச்சியால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்தன. புதிதாய், புதிராய் பிறந்த தேசியவாதத்தால் ஏராளமான இழப்புகள் நேரிட்டன.

பொதுவாகவே நமது அன்றாட பேச்சு வழக்கில் தேசியவாதம், தேசப்பற்று ஆகிய இரண்டையும் குழப்பத்துடன் புரிந்தும் புரியாமல் பயன்படுத்தி வருகிறோம். இரண்டும் நேர் எதிரிகள் என்பது நமக்கு எளிதில் புரிவது இல்லை. இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை இன்றைய இந்தியனுக்கு தெளிவுபடுத்துவது அவசியமாகிறது.

தேசப்பற்றாளர் தனது நாட்டை நேசிக்கிறார். மக்களின் வாழ்க்கை முறை, நாட்டின் சாதனைகள், வரலாற்றில் பெருமிதம் கொள்கிறார். அதேநேரம் அவர் தனது கருத்துகளை அடுத்தவர் மீது திணிக்க முற்படுவது இல்லை.

தேசப்பற்றாளரை போலவே தேசியவாதியும் தனது நாட்டை நேசிக்கிறார். ஆனால் அவரை அதிகார மமதையும் கர்வமும் ஆட்டிப் படைக்கிறது. தனது நாடு மற்ற நாடுகளைவிட மேலானது, பலம் வாய்ந்தது என்று தம்பட்டம் அடிக்கிறார். தனது கருத்துகளை அடுத்தவர் மீது திணிக்க முற்படுகிறார்.

இந்தியா 1947-ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது. அந்த காலகட்டத்தில் ஹிட்லர், ஸ்டாலின், மாவோ ஆகிய சர்வாதிகாரிகளின் தேசியவாத கொள்கைகள் உலகம் முழுவதும் நிழலாடிக் கொண்டிருந்தன. அதேநேரம் மகாத்மா காந்தி போன்ற அஹிம்சைவாதிகள் இந்தியாவில் உண்மையான தேசப்பற்றை விதைத்தனர். நாம் இந்துக்கள், முஸ்லிம்கள் என வாழக்கூடாது, இந்தியர் களாக வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்தனர்.

ஹிட்லர், ஸ்டாலின், மாவோ ஆகியோரின் தேசியவாதத்தால் ஜெர்மனி, ரஷ்யா, சீனாவில் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இந்தியாவிலோ காந்தியின் தேசப்பற்று கொள்கையால் ஒரு லிட்டர் ரத்தம்கூட சிந்தாமல் நாம் சுதந்திரக் காற்றை சுவாசித்தோம்.

கடந்த ஓராண்டாகவே தேசியவாதத்தால் உலகம் மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்து வருகிறது. பிரிட்டனில் தேசப்பற்று என்ற பெயரில் தேசியவாதிகள் நடத்திய பிரச்சாரத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அந்த நாடு வெளியேறி உள்ளது. அமெரிக்காவில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்பை உமிழ்ந்து வருகிறார். அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டினரை, அகதிகளை அடித்து விரட்டுவேன் என்று மிரட்டுகிறார். சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியை நிறுத்துவேன், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை அந்நியர் தட்டிப் பறிப்பதை தடுப்பேன் என்று சபதம் செய்கிறார். பிரிட்டனின் தேசியவாதிகள், அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்ப் ஆகியோர் தங்கள் நாடுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகின்றனர்.

கடந்த பிப்ரவரியில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் விவகாரத்தில் தேசியவாதமும் தேசப்பற்றும் இந்தியர்களைக் குழப்பத்தின் உச்சிக்கு கொண்டு சென்றன. தேசத் துரோகம் குறித்த விவாதங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கண்ணையா குமார் தன்னை தேசப்பற்றாளர் என்று அறிவித்தார். ஆனால் தேசியவாதிகள் அவர் தேசத்துரோகி என்று முத்திரை குத்தினர்.

தேசப்பற்றாளர்களும் தேசியவாதிகளும் நமது நாடு வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். தேசப்பற்றாளரை பொறுத்தவரை சிறுபான்மையினர் உட்பட அனைத்து சமூகத்தினரும் ஒருசேர முன்னேற வேண்டும் என்று விரும்புகின்றனர். தேசியவாதிகளைப் பொறுத்தவரை சமூகநீதியில் அவர்களுக்கு அக்கறை இல்லை. நாட்டின் வலிமையை பறைசாற்ற வேண்டும் என்பதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றனர்.

ஒரு தேசியவாதி எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டை தூக்கிப் பிடிக்கிறார். தனது நாடு தவறே செய்யாது என்று வாதிடுகிறார். தேசப்பற்றாளரோ தனது நாட்டை நேசிக்கும் அதே நேரத்தில் அதன் நிறை, குறைகளையும் சுட்டிக் காட்டுகிறார். சமூகநீதி, சமஉரிமைக்கு பங்கம் ஏற்படும்போது மனம்திறந்து விமர்சனம் செய்கிறார். ஆனால் தேசியவாதியால் தனது நாடு குறித்து யாரும் விமர்சனம் செய்வதைக்கூட சகித்துக் கொள்ள முடியாது.

தேசியவாதம் மூலமே நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் உலக வரலாற்றை திரும்பிப் பார்த்தால் தேசியவாதத்தால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்கூடாக பார்க்கலாம். 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வியாபித்து பரவிய தேசியவாதத்தால்தான் ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களின் நாடுகள் அடிமைப்படுத்தப்பட்டன. இந்தியா பிரிட்டனின் காலனி நாடாக மாறியது. 20-ம் நூற்றாண்டில் எழுந்த தேசியவாதத்தால் 2 உலகப் போர்கள் உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டின.

தேசியவாதத்தின் மிக மோசமான உதாரணம் ஹிட்லர். 2-ம் உலகப் போருக்கு வித்திட்ட அவர், ஆரியர்களே உலகில் உயர்ந்த இனம் என்று வாதிட்டார். பல நாடுகளை ஆக்கிரமித்தார். 80 லட்சத் துக்கும் மேற்பட்ட யூதர்களைக் கொன்று குவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி மாநிலங்களவையில் சரக்கு, சேவை வரி மசோதா (ஜிஎஸ்டி) நிறைவேறியது. அப்போது தேசப்பற்றாளர்களும் தேசியவாதிகளும் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்தியாவை வல்லரசாக, அசைக்க முடியாத சக்தியாக மாற்ற ஜிஎஸ்டி வழிவகுக்கும் என்று தேசியவாதிகள் ஆனந்த தாண்டவமாடினர். அதேநேரம் ஜி.எஸ்.டி. மசோதாவால் கடைக்கோடி ஏழைக்கும் பயன் கிடைக்கும் என்று தேசப்பற்றாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

பிரிட்டனின் தேசியவாதிகளும் அமெரிக்காவின் டொனால்டு ட்ரம்பும் தற்போது இனவாதத்தை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்கின்றனர். தங்கள் நாடுகளின் கடந்த காலப் பெருமைகளைக் கதை, கதையாக பேசுகின்றனர். இதேபாணியில் இந்து தேசியவாதிகளும் கடந்த கால ஆரிய நாகரிகத்தின் பெருமைகளைப் பேசுகின்றனர். இந்தியா இந்துக்களின் பூர்விக பூமி என்று பிரகடனம் செய்கின்றனர். இந்தியாவை இந்து தேசமாக மாற்ற வேண்டும் என்று கோஷமிடுகின்றனர். அதன்மூலம் பூர்வகால உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்று நம்புகின்றனர்.இப்போது நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டிருப்பீர்கள். நான் ஒரு தேசப்பற்றாளன், தேசியவாதி அல்ல என்பதை. ஒரு விஷயம் என்னை சோகத்தில் ஆழ்த்துகிறது. இந்தியாவில் தேசியவாதிகளும் தேசப்பற்றாளர்களும் இதுவரை அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்றதே இல்லை.

என்னைப் பொறுத்தவரை எனது நாட்டின் இயற்கை அழகில் மூழ்கித் திளைக்கிறேன். இந்தியர்களின் எண்ணற்ற சாதனைகளை எண்ணி மகிழ்கிறேன். நாட்டின் வரலாற்றில் பெருமிதம் கொள்கிறேன். எனது நாட்டை நேசிக்கிறேன். அந்த நேசத்தால் அடுத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். எனது அன்பும் நேசமும் எல்லைகளைத் தாண்டி பயணம் செய்கிறது. அதற்கு காரணம் முதலில் நான் மனிதன், அதன் பிறகுதான் இந்தியக் குடிமகன்.